ஆணவ கொலையில் தப்பிக்க துப்பாக்கி உரிமம் வேண்டும்: தஞ்சையில் காதல் திருமணம் செய்த ஜோடி மனு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வேப்பங்குளம் தெருவை சேர்ந்தவர் நாகையன். இவரது மகன் பிரவின்குமார் (31). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா (27). வழக்கறிஞர். இருவரும் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.  இந்நிலையில் இருவரும் நேற்று தஞ்சை எஸ்பி மகேஸ்வரனிடம் மனு அளித்தனர். அதில் நாங்கள்  2017ல் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம். சரண்யாவின் உறவினர்கள் எங்கள் இருவரையும் பலமுறை ஆணவ கொலை செய்ய முயற்சி செய்தனர். பலமுறை காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நாச்சியார்கோவில் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் ஜெயகவுரி என்பவர் பிரவின்குமாரை போக்கிரி பட்டியலில் சேர்த்துவிட்டார். பின்னர் தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்ததால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஒருபுறம் உறவினர்கள் ஆணவ கொலை செய்ய துரத்துகிறார்கள். மறுபுறம் போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். எனவே எங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: