சவாரி ஏற்றுவதில் தகராறு ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற 3 பேர் பிடிபட்டனர்: 4 கத்திகள் பறிமுதல்

பெரம்பூர்: சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பேசின் பிரிட்ஜ் மூலக்கொத்தலம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (42). மூலக்கொத்தலத்தில் உள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவரான ஆனந்த் (30) என்பவருக்கும், சவாரி ஏற்றுவது தொடர்பாக கடந்த வாரம் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அர்ஜூனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு ஆனந்த், தனது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து, மது போதையில் கத்திகளுடன் அர்ஜூன் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு, அவரை சுற்றிவளைத்து வெட்ட முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் 7 பேரும் தப்பியோட முயன்றனர். அதில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த டேனியல் (27), வடிவேல் (29), சுரேஷ் (30) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோட முயன்ற ஆனந்த் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: