மண்ணுளி பாம்பு வாங்குவதில் தகராறு துப்பாக்கியால் சுட்டதில் புரோக்கர் காயம்: கேரள வாலிபர்கள் 4 பேர் கைது

குளித்தலை, மே21: கரூர்  மாவட்டம், குளித்தலை தாலுகா தோகைமலை அருகே தாசில்நாயக்கனூர்  ரங்கசாமி (எ) கஞ்சாநாயக்கர் (50) என்பவர் தடைசெய்யப்பட்ட மண்ணுளி பாம்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த வியாபாரத்தில்  பொருந்தலூர் கண்ணவிடல்நாயக்கர்பட்டியை சேர்ந்த தர்மர் மகன் தங்கவேல் அப்பகுதியை சேர்ந்த ராஜா ஆகிய இருவரும் புரோக்கர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கேரளா மாநிலம் கொல்லம்பகுதியை சேர்ந்த  முகமதுரபிக் (23), விவேக் (22),  நிம்மின், நித்தீஸ். மண்ணுளி பாம்பு வாங்க  புரோக்கர் தங்கவேலை நாடி உள்ளனர். அப்போது அவரிடம் பணம் கொடுத்து  விலையும் பேசியுள்ளனர்.

மண்ணுளி பாம்பை வாங்குவதற்கு கொல்லத்திலிருந்து கார் மூலம் நேற்று முன்தினம் சின்னயம்பாளையத்திற்கு வந்துள்ளனர். அப்போது தங்கவேல் திடீரென மண்ணுளி பாம்பு இல்லையென கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு  கைகலப்பானது. இதனால் தங்கவேல் மற்றும் ராஜா சம்பவ இடத்திலிந்து தப்பியோடினர். இதனால் ஆத்திரமடைந்த கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது ரபிக் தான் வைத்திருந்த பிஸ்டல் ரக துப்பாக்கியால் இருவரையும் நோக்கி சுட்டுள்ளார். இதில் தங்கவேல் வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். நண்பர்கள் அவரை  திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு  சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் கேரள வாலிபர்கள் 4  பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதில் கார் டிரைவர்  பாலக்காட்டை சேர்ந்த சுபாஷ் தப்பியோடினார். 4 பேரையும் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

Related Stories: