அம்பத்தூரில் சிக்னல் கோளாறால் அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை 2 மணி நேரம் பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

சென்னை:  அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் நடுவழியில் அவதிப்பட்டனர். சென்னை சென்ட்ரலில் இருந்து அரகோணம் மார்க்கமாக ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த மார்க்கத்தில் 4 ரயில் பாதைகள் உள்ளன. இதில், இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் பாதைகளும், இரண்டு மின்சார ரயில் பாதைகளும் உள்ளன. இந்த மார்க்கத்தில் 135 மின்சார ரயில் சேவைகளும், 50க்கு மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த மார்க்கத்தில் உள்ள மின்சார ரயில்களில் அரசு, தனியார் ஊழியர்கள், மாணவ-மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்களும் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.

மேலும், அரக்கோணம், அண்ணனூர், பெரம்பூர், பேசின் பாலம் ஆகிய இடங்களில் ரயில் பணிமனைகளில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர் மின்சார ரயில்களில் தான் பயணிக்கின்றனர். இதனால் சென்னை- அரக்கோணம் ரயில் மார்க்கம் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4.45மணி அளவில் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், இந்த மார்க்கத்தில் சிக்னல் கிடைக்காமல் ரயில் ஒன்றன் பின் ஒன்றாக ஆங்காங்கே நடுவழியில் நின்றன. இதன் காரணமாக, பயணிகளில் சிலர் ரயிலில் இருந்து இறங்கி பஸ் மூலமாக வீடுகளுக்கு சென்றனர். மேலும், பெரும்பாலானோர் பயணிகள் நடுவழியில் ரயிலில் காத்து கிடந்தனர்.

இதனால் அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் தலைமையில்  ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ரயில்வே ஊழியர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி சிக்னல் கோளாறை சரி செய்தனர். இதன் பிறகு, இந்த மார்க்கத்தில் ஆங்காங்கே நடு வழியில் நின்ற மின்சார ரயில் மெதுவாக இயக்கப்பட்டன. மேலும், ரயில் சேவை முழுவதுமாக சீரடைய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. இதன் காரணமாக வேலை முடிந்து தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் அம்பத்தூர், அண்ணனூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு உள்ளிட இடங்களில் அடிக்கடி சிக்னல் கோளாறு ஏற்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், சிக்னல் மின் கேபிள்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். இதனால் அடிக்கடி பழுது ஏற்பட்டு சிக்னல் கோளாறு ஏற்படுவது உண்டு. மேலும், ரயில் தண்டவாளங்களில் இணைப்பு பகுதியில் சமூக விரோதிகள் கற்களை வைத்து அடைத்து சென்று விடுகின்றனர். இதன் காரணமாகவும், சில நேரங்களில் சிக்னலை இயக்க முடியவில்லை. இதனை ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் சிக்னல் கோளாறை தவிர்க்க அடிக்கடி தண்டவாள பகுதிகளை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், பழுதடைந்த சிக்னல் உதிரி பாகங்களை மற்றிடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். 

Related Stories: