தேர்தல் கருத்துக்கணிப்புகள் எதிரொலி: பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,421 புள்ளிகள், நிஃப்டி 421 புள்ளிகள் உயர்வு

மும்பை: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளால் பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,421.90 புள்ளிகள் உயர்ந்து 39,352.67 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 421.10 புள்ளிகள் உயர்ந்து 11,828.25 புள்ளிகளில் நிறைவடைந்தது.

ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க்,ஐசிஐசிஐ பேங்க், லார்சென், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்தது.பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்தது.

சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நிமிடத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்தது. நிதி, வாகனம், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

40 நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உயர்வை சந்தித்தன. பிற்பகல் வர்த்தகத்தின்போது ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து, 39 ஆயிரத்து 45 புள்ளிகளை கடந்தது. இதேபோல, தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பங்குசந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: