வேலூர்: வேலூரில் கணவன் துன்புறுத்துவதாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த புங்கனூரை சேர்ந்தவர் மெர்லின் மேரி, கணவரை பிரிந்து வாழும் இவர், அடியாட்களை வைத்து தன்னையும், குழந்தைகளையும் கணவர் மிரட்டுவதாக ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இந்த நிலையில் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மெர்லின் மேரி தர்ணாவில் ஈடுப்பட்டார். பின்னர் கொலை மிரட்டல் விடுக்கும் கணவரை உடனடியாக கைது செய்யும்படி அப்பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார். ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.