பைக் செல்ல வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவர் குத்திக் கொலை: பாஜக பிரமுகர், மகன் கைது

சென்னை அடுத்த குரோம்பேட்டையில் பைக் செல்ல வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட பள்ளி மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை குரோம்பேட்டை நாகல்கேணியை சேர்ந்த பள்ளி மாணவர் விக்னேஷ்(16), தனது நண்பருடன் கடந்த வெள்ளியன்று பைக்கில் சென்றுள்ளார். அவர்கள் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது பைக்கிற்கு வழிவிடுவது தொடர்பாக அவர்களுக்கும், பம்மல் நகர பாஜக பிரமுகர் மதன் மற்றும் அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சமாதானம் செய்து விக்னேசும், அவரது நண்பர் நந்தாவும் அங்கிருந்து சென்று விட்டனர்.

எனினும் ஆத்திரத்தில் இருந்த மதனும், அவரது மகன் நித்தியானந்தாவும் கத்தியுடன் அங்கேயே காத்திருந்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் விக்னேசும், நந்தாவும் மீண்டும் அதே வழியில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் மதன், தன்னிடம் இருந்த கத்தியால் மாணவர்கள் வி்னேஷ் மற்றும் அவரது நண்பரை தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விக்னேஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சங்கர் நகர் போலீசார், மதன் மற்றும் நித்தியானந்தம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: