தமிழக அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகம்!

சென்னை: தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கல்வித்திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் பல புதிய திட்டங்கள், கட்டுபாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக, சத்துணவு சாப்பிடும் 40 லட்சத்து 66 ஆயிரத்து 217 மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் தற்போது தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வரும் கல்வியாண்டில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2019-20ம் கல்வியாண்டிற்கு, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கரும்பச்சை நிறத்தில் கால் சட்டையும், இளம் பச்சை நிறத்தில் கட்டமிட்ட மேல் சட்டையும் வழங்கப்படும் எனவும், மாணவிகளுக்கு இதே நிறத்தில் புதிய சீருடை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சந்தன நிற வண்ணத்தில் கால் சட்டையும், அதே நிறத்தில் கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் வழங்கப்படுகிறது.

இதில் மாணவிகளுக்கு சந்தன நிறக் கோட்டுடன் கூடிய சீருடை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் திகழ வேண்டும் என்ற அடிப்படையில், தனி குழு அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையிலான நிறத்தில் ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையானது அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பபடவுள்ளது. இந்நிலையில், புதிய பள்ளிச் சீருடைகள், மாணவ, மாணவியரின் மனதை கவரும் வகையில் இருக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: