பாதி வழியில் நிறுத்தப்படும் திருச்செந்தூர் ரயில்

* கோடை விடுமுறையில் வஞ்சித்த ரயில்வேதுறை

பழநி : பாதி வழித்தடத்திலேயே நிறுத்தப்படும் திருச்செந்தூர் ரயிலால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இந்நகருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகைக்காக இவ்வழித்தடத்தில் பாலக்காடு, சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

கோடை விடுமுறையின் காரணமாக பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு கோடை விடுமுறை காலத்தில் ராமேஸ்வரம், பூனே உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு சிறப்பு ரயில்கள் ஏதும் இயக்கப்படவில்லை. தவிர, தினசரி இயக்கப்பட்டு வந்த பாலக்காடு-திருச்செந்தூர் ரயில் பராமரிப்புப் பணியின் காரணமாக தற்போது பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் திருச்செந்தூர் வரை இயக்கப்படுகிறது. இதர நாட்களில் திண்டுக்கல்லுடன் இந்த ரயில் நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். கோடை விடுமுறை காலத்தில் திட்டமிட்டு வஞ்சிக்கும் ரயில்வேதுறையின் மீது பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Related Stories: