தென் மேற்கு பருவமழை கை கொடுக்குமா? குமரியில் கன்னிப்பூ சாகுபடி தொடக்கம்

* கால்வாய்கள் தூர்வாராததால் விவசாயிகள் கலக்கம்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடைமடை வரை தண்ணீர் கிடைக்க சானல்களை முறையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன.குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்ப பூ சாகுபடிகள்  நடந்து வருகிறது. இது தவிர தென்னை, வாழை, ரப்பர் பயிர்கள் அதிக அளவு பயிரிடப்படுகிறது. சாகுபடிக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை நம்பியே விவசாயிகள் உள்ளனர். கும்பபூ சாகுபடிக்கு பின்னர் மார்ச் மாதம் பேச்சிப்பாறை அணை அடைக்கப்பட்டு, அதில் உள்ள தண்ணீர் அடுத்த கன்னிப்பூ சாகுபடிக்கு இருப்பு வைக்கப்படும்.

இந்நிலையில் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆவதால் அணையை உறுதிப்படுத்தும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால் அணையில் உள்ள தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 1.65 அடி தான் தண்ணீர் உள்ளது. இதனால் கோடைகாலம் முடிந்த பிறகு கன்னிப்பூ சாகுபடி தொடங்கும் வேளையில் பேச்சிப்பாறை அணை தண்ணீர் விவசாயத்திற்கு கிடைக்குமா என்பதில் இந்த ஆண்டும் சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த கன்னிப்பூ, கும்பபூ நெல்சாகுபடியின் போது போதிய விளைச்சல் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். வருகிற ஜூன் மாதம் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி செய்வார்கள். கன்னிப்பூ சாகுபடிக்கு அம்பை 16, திருப்பதிசாரம் 5 ஆகிய நெல் ரகத்தை பயன்படுத்தி வருகின்றனர். நெல் சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்க ஜூன் 1ம் தேதி பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அணை திறக்கப்பட்ட பிறகு பருவமழை பெய்தால் 105 நாட்களில் கன்னிப்பூ அறுவடையாகும். ஆனால் தற்போது பேச்சிப்பாறை அணை உறுதிபடுத்தும் வேலை இன்னும் முடிவடையாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் கோடையின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாசன கால்வாய்கள், குளங்கள் வறண்டு கிடக்கின்றன. பல இடங்களில் மீன் பிடிப்பதற்காக குளங்களில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்க வேண்டும். ஆனால் இந்த  ஆண்டு தென் மேற்கு பருவமழை திட்டமிட்டப்படி தொடங்குமா? என்பதும் கேள்விக்குறியாக தான் உள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான சாகுபடி பணிகள் தென் மேற்கு பருவமழையை நம்பியே உள்ளன.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை அதிக மழை பொழிவு இந்த கால கட்டத்தில் தான் இருக்கும். ஆனால் ஓகி புயல் மற்றும் பானி புயல் உருவான நிலையில், தட்ப வெப்ப நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலையில் பெய்ய வேண்டிய மழை கடந்த இரு ஆண்டுகளாகவே ஏமாற்றி வருகிறது. நிலத்தடி நீர் மட்டமும் குமரி மாவட்டத்தில் வெகுவாக குறைந்து விட்டது. கடும் கோடையின் காரணமாக கால்வாய்கள்,  குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதை பயன்படுத்தி முறையாக தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி உள்ளனர்.

சுசீந்திரம், காக்கமூர் உள்ளிட்ட பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடிக்கான நாற்று நடவு தொடங்கி உள்ளது. சுசீந்திரம் பெரிய குளத்தில் தண்ணீர் உள்ளதால், விவசாயிகள் சாகுபடியை தொடங்கி உள்ளனர். பறக்கை, தெங்கம்புதூர் பகுதிகளில் நாற்று நட்டு தண்ணீருக்காக காத்து இருக்கின்றனர். பாசன கால்வாய் சாகுபடி நடைபெறும் பகுதிகளில் இன்னும் சாகுபடி பணி தொடங்க வில்லை. ஜூன் 1ம் தேதி அணை திறந்து அதன் பின்னர் தான் கால்வாயில் தண்ணீர் வரும். அதை பொறுத்து சாகுபடி பணிகள் பல இடங்களில் தொடங்கும்.

பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் தேக்க முடியாததால், தென் மேற்கு பருவமழையை நம்பியே இந்த ஆண்டும் சாகுபடி உள்ளது. இதற்கிடையே பொதுப்பணித்துறையில் போதுமான நிதி ஆதாரம் இல்லாததால் தூர்வாரும் பணிகளும் முறையாக நடக்க வில்லை என விவசாயிகள் கூறி உள்ளனர். நாஞ்சில்நாடு, புத்தனாறு, அனந்தனார் சானல் போன்றவற்றில் கடைமடை வரை தண்ணீர் செல்ல முறையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயம், குடிநீருக்கு ஆதாரம்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை  பொறுத்தவரை விவசாய பணிகளுக்கு மட்டுமின்றி, குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி  வருகிறது.  பேச்சிப்பாறையில் தண்ணீர் தேக்க முடியாத நிலையில் பெருஞ்சாணி  அணையில் அதிகளவு தண்ணீர் தேக்க  அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  பெருஞ்சாணி அணையின் மொத்த கொள்ளளவு 77 அடி ஆகும். நேற்று காலை 8 மணி  நிலவரப்படி அணை நீர் மட்டம் 23.30 அடியாக இருந்தது. சிற்றார்1, 5.28  அடியாகவும், சிற்றார்2, 5.38 அடியாகவும் உள்ளன. பொய்கை 9.20,  மாம்பழத்துறையாறு 42.32 அடியாக உள்ளது.

Related Stories: