மும்பை: தேர்தல் கணிப்பு முடிவுகளுக்கு ஏற்ப இன்றைய பங்குச்சந்தை நிலவரம் இருக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதிலும், தேர்தல் நெருங்க நெருங்க முதலீட்டாளர்களிடையே தயக்கமும், பதற்றமும் காணப்பட்டது. இதுதவிர, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப்போர், ஈரான் மீதான தடை காரணமாக கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியவை பங்குச்சந்தையில் எதிரொலித்தன.
இதனால், கடந்த ஏப்ரல் 26ம் தேதியில் இருந்து தொடர்ந்து 9 நாட்களாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்த 9 நாள் வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ₹8.53 லட்சம் கோடியை இழந்தனர். பங்குசந்தை குறியீடு 1,941 புள்ளிகள் சரிந்தது. இதன்பிறகும் பங்குச்சந்தையில் பெரிய முன்னேற்றம் இல்லை. ஒரு நாள் ஏறுமுகத்திலும், ஒரு நாள் இறங்குமுகத்திலும் என தள்ளாட்டம் தொடர்கிறது. கடைசி 2 நாட்கள் திடீர் ஏற்றம் கண்டது. கடைசி நாளான வெள்ளிக்கிழமை, மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 537.29 புள்ளிகள் அதிகரித்து 37,930.77 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 150.05 புள்ளிகள் உயர்ந்து 11,407.15 ஆகவும் இருந்தன.