சென்னிமலை: சென்னிமலை பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் திருமணம் நிச்சயம் செய்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தொழிலதிபரின் மகன் ரகு என்பவர் மீது ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின்கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிவுசெய்து அவரை தேடி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக முன்ஜாமீன் கேட்டும் சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள ரகுவை கைது செய்யாமல் போலீசார் அவருக்கு உதவி செய்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த 8 மாதங்களுக்கு சென்னிமலையை சேர்ந்த இச்சிப்பட்டி சாமியப்பன் என்ற தொழிலதிபர் மகன் ரகு என்கிற துரைராஜூக்கும் எனக்கும் திருமணம் செய்ய இருவரின் பெற்றோர் முடிவு செய்தனர். அதன்பிறகு ரகு என்னுடன் நெருங்கி பழகினார். கடந்த 23.12.18ம் தேதி இரவு எங்கள் வீட்டிற்கு ரகு வந்தபோது எனது அம்மா வெளியூர் சென்று விட்டதால், நான் தனியாக இருந்தேன். அப்போது ரகு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என ரகு என்னிடம் சத்தியம் வாங்கினார். அதன்பின்னர் திருமணம் தள்ளிக்கொண்டே போனதால் இதை சொல்லி மிரட்டியே ரகு பல முறை என்னுடன் உறவு கொண்டார். மருத்துவ சோதனை செய்து பார்த்த போது நான் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து ரகுவிடம் சொன்னதும் எனக்கு கருச்சிதைவு மாத்திரை வாங்கி கொடுத்தார்.
இதுபற்றி ரகுவின் தந்தை சாமியப்பனிடம் கூறியபோது, அவரும் ரகுவின் தாய் சுப்புலட்சுமியும் என்னை பற்றி தரக்குறைவாக பேசினர். அதன்பிறகு எங்கள் வீட்டிற்கு வருவதை ரகு நிறுத்திவிட்டார். தற்போது என்னை விட அதிகம் வசதியுள்ள வேறு பெண்ணை ரகுவிற்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இதையறிந்த ரகுவின் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு கடந்த மார்ச் 6ம் தேதி முதல் தலைமறைவாகி விட்டனர். தலைமறைவாக உள்ள குற்றவாளி ரகுவை பிடிக்க இரண்டு மாத காலமாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நானும், ரகுவும் அடிக்கடி அவரது காரில் வெளியே செல்வோம். அந்த காரில் எங்களது நெருக்கமான வீடியோ சிடி, செல்போன் உரையாடல்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது. அந்த ஆவணங்களோடு ஈரோடு மகளிர் காவல் நிலைய போலீசார் காரை பறிமுதல் செய்து தனியார் வாகன நிறுத்தத்தில் வைத்திருந்தனர். தற்போது அந்த காரில் உள்ள ஆவணங்கள் மாயமாகி உள்ளது. எனவே விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.