குமரி மாவட்டத்தில் நெருங்கிய உறவுகளால் அதிகளவில் பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகள்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நெருங்கிய உறவுகளால் அதிகளவில் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதி சர்வதேச குழந்தைகள் சேவை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் தற்போது குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பாலியல் ரீதியான தொல்லைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது, உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி 1098 சைல்டு லைன் அமைப்பு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் நேற்று வினியோகிக்கப்பட்டன.

இது குறித்து சைல்டு லைன் அலுவலர்கள் கூறியதாவது: 18 வயதுக்குட்பட்ட அனைவருமே குழந்தைகள் ஆவர். வன்முறைகள், தீங்கிழைத்தல், துன்புறுத்துதல், சித்ரவதை செய்தல், பாலியல் கொடுமைகள், கடத்தல், போதை பொருட்களுக்கு உட்படுத்துதல் போன்ற பல்வேறு நெருக்கடி கால விளைவுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது மிகவும் இன்றியமையாத கடமை ஆகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்காத நிலையில், குழந்தைகள் தங்களை பாதுகாத்து கொள்ள சேவை அமைப்புகளும், அரசும் உறுதுணையாக இருக்கிறது.

இந்தியாவில் ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சக திட்டத்தின் உதவியுடன், தேசிய அளவிலான 24 மணி நேர அவசர இலவச தொலைபேசி சேவை 1098 செயல்படுகிறது. குழந்தைகளின் உரிமைகளை பாதிக்கும் வகையில் எந்த வித பிரச்சினையாக இருந்தாலும் 1098 க்கு இலவசமாக தகவல் தெரிவிக்கலாம். குமரி மாவட்டத்தில் சைல்டு லைன் இந்தியா பவுண்டேசன், கோட்டாறு சமூக சேவை சங்கத்துடன் இணைந்து சைல்டு லைன் - கன்னியாகுமரி என்ற பெயரில் இயங்கி வருகிறது. நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி இதன் நோடல் அமைப்பாக தற்போது செயல்படுகிறது. காணாமல் போன குழந்தைகள், பாலியல் கொடுமை, மன ரீதியான கொடுமை, உடல் ரீதியான கொடுமை , வீட்டு வேலைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள், வீட்டை விட்டு ஓடி வந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள், பள்ளி இடை நிறுத்தம் குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், தெருவோர குழந்தைகள், சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள், போதைக்கு அடிமையான குழந்தைகள், சிறார் சீர்திருத்த பள்ளியில் உள்ள குழந்தைகள், பெற்றோரின் சண்டையால் பாதிக்கப்படும் குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் போன்ற குழந்தைகளுக்கு எதிரான எந்த வித பிரச்சினைக்கும் 1098 சைல்டு லைன் அமைப்பை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை அதிக குழந்தைகள் நெருங்கிய உறவுகளாலும், பக்கத்து வீட்டில் உள்ள பெரியவர்களாலும் தான் அதிகளவில் பாலியல் ெதால்லைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள். ஆனால் பல பெற்றோர் தங்களது குழந்தையின் எதிர்காலம் கருதி வெளியே சொல்வதில்லை. அவ்வாறு இல்லாமல் ைதரியமாக பாதிக்கப்படும் குழந்தைகள் 1098க்கு புகார் அளிக்கலாம். அவர்களுக்கு தேவையான நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories: