மொடக்குறிச்சி: ஈரோட்டை அடுத்த பாசூரில் காலிங்கராயன் வாய்க்காலில் வலம்புரி விநாயகர் சிலை, நடராஜர் சிலை மீட்கப்பட்டது. இது குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பாசூர் ரயில்வே கேட் அருகே காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேங்கிய வாய்க்கால் நீரில் மீன் பிடிப்பதற்காக நேற்று அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (25) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் காலிங்கராயன் வாய்க்காலில் வலை விரித்துள்ளனர். அப்போது வலையை இழுக்க முடியாமல் திணறியுள்ளனர். 5 பேரும் வலையை இழுந்த போது வலையில் சாக்குமூட்டை சிக்கியுள்ளது. அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் வலம்புரி விநாயகர் சிலை, நடராஜர் சிலை இருந்தது தெரியவந்தது.