மக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேட்டி

பீகார்: மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்களுக்கு நடத்தக்கூடாது என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 2 மாதமாக நடந்து வந்த மக்களவை தேர்தல், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நாட்டின் 17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 12ம் தேதியுடன் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 7வது மற்றும் இறுதி கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

7 மாநிலங்கள், ஒரு  யூனியன் பிரதேசத்தில் இந்த தேர்தல் நடக்கிறது.  பீகாரில் 8, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் தனது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். லக்னோவில் உ.பி முதல்வர் யோகி , பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஹர்பஜன்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தனர். மேலும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னா, ராஜ் பவனில் உள்ள அரசு பள்ளியில் 326 வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மேலும் பீகார் துணை முதல்வர் சுசில் மோடி பாட்டனாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் பேட்டியளித்த முதல்வர் நிதீஷ் குமார்; மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்களுக்கு நடத்தக்கூடாது. மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கும் கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கும் அதிக நாட்கள் உள்ளது என்று கூறினார். மேலும் மக்களவைத் தேர்தலை குறைந்த நாட்களில் நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு கடித்த எழுதுவேன் என்று தெரிவித்தார்.

Related Stories: