ஜோகோவிச் முன்னேற்றம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் பைனலில் கோன்ட்டா

ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, இங்கிலாந்து வீராங்கனை ஜோகன்னா கோன்ட்டா தகுதி பெற்றார். அரை இறுதியில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்சுடன் (6வது ரேங்க்) நேற்று மோதிய கோன்ட்டா (42வது ரேங்க்) 5-7 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் கடுமையாகப் போராடிய அவர் 7-5 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. அதே வேகத்துடன் 3வது செட்டில் பெர்டன்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த கோன்டா 5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 49 நிமிடத்துக்கு நீடித்தது. செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா - மரியா சக்கரி (கிரீஸ்) இடையே நடைபெறும் 2வது அரை இறுதியில் வெற்றி பெறும் வீராங்கனையுடன் பைனலில் கோன்ட்டா மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் 4-6, 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் போராடி ஜுவன் மார்டின் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) வீழ்த்தினார். இந்த போட்டியில் டெல்போட்ரோவுக்கு 2 முறை மேட்ச் பாயின்ட் கிடைத்தும், ஜோகோவிச் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியின் பிடியில் இருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது. அரை இறுதி ஆட்டங்களில் ரபேல் நடால் (ஸ்பெயின்) -ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), ஜோகோவிச் (செர்பியா) - டீகோ ஷ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) மோதுகின்றனர்.

Related Stories: