ஐசிஎப் ரயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் சிறுமி சாவு: பள்ளி விடுமுறைக்கு வந்தபோது சோகம்

சென்னை: பள்ளி விடுமுறையை கொண்டாட சென்னைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி, தொட்டிலில் விளையாடியபோது சேலை கழுத்தை இறுக்கியதால் மூச்சுச்திணறி இறந்தாள். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் அஸ்வதி (11), அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். சிறுமியின் தாய்மாமன் வினோத்குமார், சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் சில நாட்களுக்கு முன்பு தனது பாட்டி ரமாவுடன் ஐசிஎப் ரயில்வே ஊழியர் குடியிருப்பில் இருக்கும் வினோத்குமாரின் வீட்டுக்கு சிறுமி அஸ்வதி வந்திருந்தாள். நேற்று குடும்பத்தினர் வௌியில் சென்ற ேநரத்தில் சிறுமி அஸ்வதி மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.   

மாலையில் சிறுமியின் சித்தப்பா ஈஸ்வரன் வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால், ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார். அங்கு சிறுமி அஸ்வதி சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் கழுத்து இறுகி, அசைவற்ற நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று, தொட்டிலில் கழுத்து இறுகி உயிருக்கு போராடிய சிறுமியை மீட்டு ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து ஐசிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், சிறுமி தொட்டிலில் விளையாடியபோது சேலையில் கழுத்து இறுகி உயிரிழந்தது தெரியவந்தது.

Related Stories: