சென்னை: தேசிய நீச்சல் சம்மேளனம்(எஸ்எப்ஐ) புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஜெயபிரகாஷ் சங்கத்தின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இச்சங்கத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இதுவரை சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பில் ஜெயபிரகாஷ் இருந்தார். பொதுச் செயலாளராக குஜராத்தைச் சேர்ந்த சோக்ஷி மோனலும், பொருளாளராக தெலங்கானாவைச் சேர்ந்த மேகலா ராமகிருஷ்ணாவும், துணைத் தலைவர்களாக கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் சுகுமாறன் உட்பட 5 பேரும், இணைச் செயலாளராக கர்நாடகாவைச் சேர்ந்த மோகன் சதீஷ்குமார் உட்பட 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.