மு.க.ஸ்டாலினால் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் 4 தொகுதிகளில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வேண்டுகோள்

சென்னை: 4 தொகுதிகளில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் தொகுதி மக்கள் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திட வேண்டும். இந்த 4 தொகுதிகளின் வெற்றி தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கான நெற்றித் திலகமாக அமையட்டும். ஏற்கனவே மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களும் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளன. மத்தியில் உள்ள சர்வாதிகார மோடியின் ஆட்சியையும், மாநிலத்தில் உள்ள மக்கள் விரோத எடப்பாடி ஆட்சியையும் அகற்றிட மக்கள் ஆர்வத்தோடு நடந்து முடிந்த தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். கடந்த 5 ஆண்டு கால மோடி ஆட்சியில் சொல்லும் படியான எந்த மக்கள் திட்டமும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. மோடியின் அடிமையான எடப்பாடி அரசு தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் சீரழித்து விட்டது. ஓரு நாட்டின் பெருவாரியான மக்களின் வேலை வாய்ப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரியளவில் உதவி செய்துவது கட்டுமானம் மற்றும் மனைத் தொழிலாகும்.

இந்தத் தொழில் நாட்டின் அடிப்படை கட்டமைப்பைப் பணிகளை மேற்கொண்டு தொழில் வளர்ச்சி பெருகிட உதவி செய்கிறது. தொழில் வளர்ச்சிப் பெருகினால் வேலை வாய்ப்பு பெருகி, பணம் புழக்கம் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியடையும்.

அதிமுக அரசின் தவறான நடவடிக்கையால் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் அடியோடு முடங்கியுள்ளது. கட்டுமானம் மற்றும் மனைத் தொழிலில் ஈடுபடும் அரைக்கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது. சட்டம், ஓழுங்கு அடியோடு கெட்டுள்ளது. நீட் தேர்வு அடித்தட்டு மாணவர்களின் மருத்துவ கனவை பறித்துள்ளது. இப்படி மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத எடப்பாடி அரசை தூக்கி எறிந்திட ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் மக்கள், கட்சி பாகுபாடின்றி திமுகவிற்கு வாக்களித்திட வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த முடியும் என்பதால் மக்கள் சிந்தாமல், சிதறாமல் தி.மு.கவிற்கு வாக்களித்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: