சென்னை: சூனாம்பேட்டில் பாதுகாப்பு கவசம், ஊதிய உயர்வு உள்பட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான உப்பள ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த செய்யூர் தாலூகாவிற்கு உட்பட்ட சூனாம்பேடு பகுதியில் தனியார் உப்பளம் தொழிற்சாலை இயங்கி வருகிறது. உப்பு உற்பத்தி செய்யப்படும் இத்தொழிற்சாலையில் வில்லியம்பாக்கம், சூனாம்பேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெண்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தொழிற்சாலை சார்பில் உரிய பாதுகாப்பு கவசங்கள், போனஸ், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என இங்குள்ள தொழிலாளர்கள் கடந்த 25 ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.