ஆல் ரவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்... : கிளைவ் லாயிட் கணிப்பு

உலக கோப்பை தொடரில் ஆல் ரவுண்டர்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் கூறியுள்ளார். 1975 மற்றும் 1979ல் உலக கோப்பையை வென்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இருந்த லாயிட், 2019 உலக கோப்பை தொடர் குறித்து கூறியதாவது: இந்த தொடரில் விளையாட உள்ள பத்து அணிகளுமே பலம் வாய்ந்தவை தான். குறிப்பாக,  எல்லா அணிகளிலுமே உலகத் தரம் வாய்ந்த ஆல் ரவுண்டர்கள் அதிகம் உள்ளனர். இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் பெரும்பாலும் ரன் குவிப்புக்கே சாதகமாக  உள்ளன. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது.

அதனால் தான், ஆல் ரவுண்டர்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கும் என்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. டி20 லீக் தொடர்களில் நன்கு விளையாடி பார்மில் உள்ள முன்னணி வீரர்கள் பலரையும் உலக கோப்பைக்கான அணிக்கு தேர்வு செய்துள்ளது சரியான நடவடிக்கை. கிறிஸ் கேல், ரஸ்ஸல் போன்றவர்கள் இடம் பெற்றுள்ளது அணியை மேலும் வலுவாக்கி உள்ளது. இங்கிலாந்து அணியும் பலமானதாக உருவெடுத்துள்ளது. தங்கள் அணி கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 அணியாக விளங்கும் இங்கிலாந்து, மற்ற அணிகளுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும். இவ்வாறு லாயிட் கூறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் மே 31ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது (நாட்டிங்காம்). இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் லீக் ஆட்டம் மான்செஸ்டரில் ஜூன் 27ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories: