வாஷிங்டன்: வெளிநாட்டினருக்கு குடும்ப உறவுகள் அடிப்படையில் குடியுரிமை (கிரீன் கார்டு) வழங்காமல், திறமை படைத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய முறையை அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு ஆண்டு தோறும் 11 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66 சதவீத குடியுரிமை வழங்கப்படுகிறது. திறன் அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்த முறையை மாற்ற அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வேலை மற்றும் திறமை அடிப்படையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கிரீன் கார்டுகளை வழங்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறுகிறார். இந்த முறை அமல்படுத்தப்பட்டால் எச்1பி விசாவில் அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பல இந்தியர்களுக்கு விரைவில் கிரீன் கார்டு கிடைக்க வாய்ப்புள்ளது.