குடுமியை பிடிச்சி அடிச்சி விரட்டாம தீவிரவாதிகளுக்கு பூஜையா செய்யணும்?: எதிர்க்கட்சிகளுக்கு மோடி ஆவேச கேள்வி

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதுபோல், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டிச் சென்ற, இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தானில் பிடிபட்டார். பின்னர் அவரும் மீட்கப்பட்டார். இந்த இரண்டையும் தங்களின் சாதனையாக பாஜ தலைவர்கள் பிரசாரங்களில் பேசி வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

அதோடு, தீவிரவாதத்தையும் நாட்டு பாதுகாப்பையும் மையப்படுத்தியே பாஜ தலைவர்களின் தேர்தல் பிரசாரம் உள்ளது. தேர்தலுக்காகத்தான் இத்தகைய பிரசார உத்திகளை பாஜ கையாண்டு வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தனக்கு எதிராக பல்வேறு கட்சிகள் சேர்ந்து ஏற்படுத்தியுள்ள கூட்டணியை கலப்பட கூட்டணி என்றே மோடி விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 7வது கட்டமாக வரும் 19ம் தேதி 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் பீகார் மாநிலம் பாடலிபுத்ரா தொகுதியி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பீகார் மாநிலத்தில் நான் மேற்கொள்ளும் கடைசி பொதுக்கூட்டம் இதுதான். என் மீது நீங்கள் அன்பை பொழிந்துள்ளீர்கள். தேர்தல் முடிவு எனக்கு சாதகமாக வர இருக்கிறது. இருப்பினும், இந்த கடைசி கட்ட தேர்தலில், இந்த வெற்றியை பிரமாண்ட வெற்றியாக ஆக்குவதை உறுதிப்படுத்துங்கள்.  பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மக்கள் நல திட்டங்களில் கவனம் செலுத்துவேன். என் மேல் நீங்கள் வைத்துள்ள அன்பு எனது வெற்றியை உறுதிப்படுத்தும்.   தீவிரவாதிகளை பேய், பிசாசுகளை துரத்துவது போல் அடித்து துரத்த வேண்டும்.

ஆனால், எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பை ஒன்றுமே இல்லாததுபோல் ஆக்குகின்றனர். தீவிரவாதிகள் தாக்குதலால் பலர் பலியாகியுள்ள நிலையில், இது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக தெரியவில்லையா? தீவிரவாதிகளுக்கு என்ன ஊதுபத்தி காட்டி ஆராதிக்கவா முடியும்? அவர்களை பேய்களை துரத்துவது போல்தான் குடுமியை பிடித்து உலுக்கி அடித்து விரட்ட வேண்டும்.

பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. ஜாதிய அரசியல் நடத்தி வரும் லாலு பிரசாத், ஆட்சிக்கு வந்ததும் எல்லாவற்றையும் மறந்து விடுவார். பொதுமக்கள் மீது அக்கறை செலுத்த மாட்டார். இவ்வாறு மோடி பேசினார். காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சாம் பிட்ரோடா, கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரசாரத்தில் இது குறித்து குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்த பேச்சு எதிர்க்கட்சிகளின் ஆணவத்தை காட்டுகிறது என்றார்.

நானே மீண்டும் பிரதமர்:

மோடி மேலும் பேசுகையில், ‘‘மக்களவைக்கு ஏற்கனவே முடிந்து விட்ட 5ம் கட்ட தே்ரதலின் போதே பாஜ.வின் வெற்றி உறுதியாகி விட்டது. 7வது கட்ட தேர்தல் முடிந்த பிறகு பாஜ. 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 23ம் தேதிக்குப் பிறகு நானே மீண்டும் பிரதமராக வந்து, உங்களுக்கு சேவை ஆற்றுவேன்,’’ என்றார்.

Related Stories: