3மன்மோகன கேலி செஞ்சீங்களே; இப்ப, உங்க கதிய பார்த்தீங்களா?: பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு

பஞ்சாப் மாநிலம், பரித்கோட் மாவட்டத்தின் பர்கரி பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது:

முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கை முன்பு மோடி கேலி செய்தார். ஆனால், 5 ஆண்டுக்குப் பிறகு இப்போது, மன்மோகனை அவரால் கேலி செய்ய முடியவில்லை. மாறாக, பிரதமர் மோடியை இந்த நாடே கேலி செய்து கொண்டிருக்கிறது.

கடந்த 2015ல் சீக்கியர்களின் புனித நூல் இங்கு அவமதிக்கப்பட்டது. அந்த தவறை செய்தவர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம் என உங்களிடம் உறுதி அளித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியை பொறுத்த வரையில், ஒரே ஒரு தனிநபரே நாட்டை வழி நடத்தி விடலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், மக்கள்தான் நாட்டை வழிநடத்த வேண்டியவர்கள்.

56 இன்ச் மார்பளவு இருப்பதாக கூறிக் கொள்ளும் மோடி, ஊழலைப் பற்றி விவாதிக்க அழைத்தால் பயந்து ஓடுகிறார். பாஜ அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, கப்பார் சிங் வரி (ஜிஎஸ்டி) ஆகிய 2 மோசமான நடவடிக்கை, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, லட்சக்கணக்கானோரை வேலையில்லாமல் செய்து விட்டது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவதாக கூறி பிரதமர் மோடி பொய் சொல்லி இருக்கிறார். ஒவ்வொருவர் வங்கி கணக்கில் அவர் போடுவதாக கூறிய ரூ.15 லட்சத்தையும் தராமல் ஏமாற்றிவிட்டார். இவ்வாறு ராகுல் பேசினார்.

Related Stories: