அனைத்துத் துறைகளிலும் மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி சாதனை: அதிமுக தலைமை அறிக்கை

சென்னை: அனைத்துத் துறைகளிலும் மக்கள் நலத் திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி சாதனை படைத்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:

விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிட குடிமராமத்து திட்டம்,  பணிக்குச் செல்லும் மகளிர்க்கு மானியத்துடன் இருசக்கர வாகனம், அனைத்துத் தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடிட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி ரூ. 2,000, மேலும் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்ததற்கான முதன்மை விருது, உணவு தானிய உற்பத்தியில் சாதனை புரிந்தமைக்கான மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதுகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் முதன்மை மாநிலத்திற்கான மத்திய அரசின் விருது,  சமூகப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு நல் ஆளுமைக்கான விருது,  பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினி மயமாக்கியதற்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.

மேலும், அனைத்துத் துறைகளின் மூலம் மக்கள் நலத்திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது.  

திருநங்கைகள் சொந்த தொழில் தொடங்கும் நிதிக்கான மானியம் ரூ.20,000லிருந்து ரூ. 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ. 6.70 கோடி செலவில் சிறப்பு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சியில் தமிழ்நாடு பேரிடர் தரவு மீட்பு மையம் ரூ. 59.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 23 கோடி செலவில் சென்னையில் நிதி தொழில்நுட்ப சிறப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. சேலத்தில் ரூ. 19.72 கோடி செலவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காஅமைக்கப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் நலனுக்காக 13வது ஊதிய ஒப்பந்தம் கழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ரூ.140 கோடி செலவில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மின் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் மட்டும் 12,360 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம்  ரூ. 32,206  கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ரூ.191.84 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்ல ஆண்டுதோறும் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த ஆண்டு 3,764 ஹஜ் புனித பயணிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.  ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 600 கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள ரூ. 1.20 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இவை அதிமுக அரசின் சாதனைகள் ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: