சென்னை, மே 16: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்த்து இம்முறை வாக்கு எண்ணிக்கை நடப்பதால், தேர்தல் முடிவு தெரிவதில் பல மணி நேரம் தாமதமாகும் என்று பரவிய கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 23ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், அடுத்த ஒரு மணி நேரத்தில் முதல் சுற்று முன்னிலை விவரங்கள் தெரிய வரும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த மாதம் 18ம் தேதி நடந்து முடிந்தது. இதில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 45 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது காலியாக அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், 13 வாக்குச் சாவடிகளுக்கான மறுவாக்குப் பதிவும் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இத்துடன், நாடு முழுவதும் தேர்தல் முடிவுக்கு வருகிறது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வருகிற 23ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
வழக்கமாக, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் முதல் சுற்றுக்கான முன்னணி நிலவரம் தெரிய வரும், பகல் 12 மணிக்குள் கணிசமான முடிவுகள் வெளியாகி, அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது தெரிந்து விடும். இழுபறி இருந்தால் மட்டுமே குழப்பம் ஏற்படும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் கிளப்பப்பட்டதால், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பதிவான 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால்., இம்முறை தேர்தல் முடிவு வெளியாவதில் பல மணி நேரம் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கைக்கான முன் ஏற்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையத்தின் முதுநிலை துணை தேர்தல் ஆணையாளர்கள் உமேஷ் சின்கா, சந்தீப் சக்சேனா, இயக்குநர் நிகில் குமார், தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் (செலவினங்கள்) திலீப் சர்மா ஆகியோர் கலந்து கொண்டு, வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பயிற்சி வழங்கினர். முன்னதாக, முதுநிலை துணை தேர்தல் ஆணையாளர் உமேஷ் சின்கா வாக்கு எண்ணிக்கை முறைகள் குறித்த கையேடு ஒன்றை வெளியிட்டார். இந்த பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழிமுறைகள் மற்றும் விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ணும் முறை, மற்றும் அஞ்சல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், தபால் ஓட்டுகளை மின்னணு முறையில் மாற்றுவதற்கான ஏற்பாட்டு முறை தொடர்பான வழி முறைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வரவேற்புரை ஆற்றினார். கேரளா தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா மற்றும் தமிழகம், குஜராத், கேரளா மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆய்வு கூட்டம் நேற்று காலை 11.15 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை அனைத்து தேர்தல் அலுவலர்களும் பார்வையிட்டனர். இதையடுத்து, பிற்பகல் 3 மணிக்கு அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த பயிற்சியில் வாக்கு எண்ணிக்கையின்போது என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றியும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை மாதிரி வாக்கு எண்ணிக்கை மையமாக மாற்றி அமைத்திருந்தோம். இதை அனைத்து தேர்தல் அதிகாரிகளும் பார்வையிட்டனர். மாதிரி வாக்கு எண்ணிக்கை மையம், மாநிலத்திற்கு ஒன்று என இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு, அதே மாதிரியாக எல்லா மையமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்று கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள், விவிபேட் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங்க் ரூமை சுற்றி, மத்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மற்ற இரண்டு அடுக்கு பாதுகாப்பில் மாநில போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே வர முடியாது. உள்ளே வரும் அதிகாரிகளும் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகே உள்ளே வர முடியும். வாக்கு எண்ணிக்கை அன்று ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவிபேட் இயந்திரங்கள், ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டு எண்ணப்படும். விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ண, வாக்கு எண்ணும் மையத்தில் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. இது, வங்கிகளில் காசாளர் உட்கார்ந்திருக்கும் அறை போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கும். விவிபேட்டில் உள்ள ஒரு வாக்கு சீட்டுகூட வெளியே பறந்து செல்லாதவாறு மிகவும் பாதுகாப்பாக இந்த அறை அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு விவிபேட் எண்ணி முடிந்த பிறகு அடுத்த விவிபேட் எண்ணப்படும். ஒரு விவிபேட் எண்ணுவதற்கு மட்டும் 40 நிமிடங்கள் ஆகலாம். வாக்கு எண்ணிக்கை தொடங்கும் மே 23ம் தேதி காலை 8 மணிக்கு, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதற்கு 30 நிமிடங்களாகும். அடுத்து, 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதில், ஏற்கனவே உள்ள பழைய நடைமுறைகளே பின்பற்றப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை ஒவ்வொரு சுற்றாக எண்ணப்படும். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் 14 டேபிள்கள் போடப்பட்டுள்ளது. ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிய 30 முதல் 35 நிமிடங்களாகும். ஒவ்வொரு சுற்று முடிந்தவுடன், முடிவுகள் அங்குள்ள பலகையில் எழுதப்படும். ஒரு சுற்று முழுவதும் முடிந்த பிறகுதான் அடுத்த சுற்று எண்ணிக்கைக்கு ஊழியர்கள் போவார்கள். இதன் மூலம், ஒரு மணி நேரத்தில் முன்னிலை நிலவரம் தெரிய வரும். 20 முதல் 26 சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிய 7 மணி நேரம் முதல் 8 மணி நேரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.சோழிங்கநல்லூரில் மட்டும் 30 டேபிள்சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் மேலும் கூறுகையில், ‘‘வாக்கு எண்ணிக்கைக்காக அனைத்து சட்டமன்ற தொகுதிக்கும் 14 டேபிள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஆணையத்தின்அனுமதி பெற்று 30 டேபிள் போடப்பட்டுள்ளது,’’ என்றார்.வாக்குகளில் வித்தியாசம் வந்தால் என்ன செய்வது?சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் மேலும் கூறுகையில், ‘‘வாக்கு எண்ணிக்கையின்போது கன்ட்ரோல் யூனிட்டில் பேட்டரி பழுதடைந்து ஆன் ஆகாமல் போனால், அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சில நேரம் 17சி மற்றும் 17ஏ அதாவது கன்ட்ரோல் யூனிட் (வாக்குப்பதிவு இயந்திரம்) பதிவாகும் வாக்குக்கும், மொத்தமாக பதிவான வாக்குக்கும் ஒன்று இரண்டு வித்தியாசம் இருக்கலாம். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அந்த மாதிரி சூழ்நிலையில் என்ன பண்ணலாம், ஒரு சில வாக்குச்சாவடிகளில் பழுதான காரணங்களால் ஒன்றுக்கு மேற்பட்ட கன்ட்ரோல் யூனிட் பயன்படுத்தி இருக்கலாம். அதெல்லாம் தேர்தல் நடத்தும் அதிகாரியின் டைரியில் ரெக்கார்டு ஆகி உள்ளது. அந்த மாதிரி சமயத்தில் எந்தெந்த மாதிரி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணைய உத்தரவை மிகவும் உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர்,’’ என்றார்.