ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சென்னை வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு

சென்னை: ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த  சென்னை வீரர் பாலகிருஷ்ணன் விபத்தில் உயிரிழந்தார். சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் 2010ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன் விடுமுறையில் சென்னை வந்துள்ளார். ஊருக்கு வந்த பாலகிருஷ்ணன் தனது உறவினரைப் பார்த்து விட்டு தோழியுடன் அரும்பாக்கம் வழியாக இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது ஜல்லிக் கலவை ஏற்றி சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது திடீரென நிலைதடுமாறி லாரிக்கு அடியில் விழுந்தார். லாரி மோதியதில் விபத்துக்குள்ளானதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறைக்கு ஊருக்கு வந்த விளையாட்டு வீரருக்கு நேர்ந்த பரிதாபத்தால் அவருடைய உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories: