கோவை: கோவையில் நீதிமன்றம் அருகே ஜாமினில் உள்ளவர்கள் மீது அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் கையெழுத்திட்ட பிறகு திரும்பிய 2 பேரை சரமாரியாக வெட்டிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் நேற்று பட்டப்பகலில் நீதிமன்றம் அருகே நடந்து சென்ற இருவரை, 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை கணபதி காமராஜபுரத்தைச் சேர்ந்த பிரதீப் அடிதடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு தமது நண்பர் தமிழ்வாணனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். உப்பிலிபாளையம் சிக்னல் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரதீப், தமிழ்வாணன் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.