சென்னை : சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, அவை அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முட்டைகளை தனியாரிடமிருந்து வாங்குவதற்கு டெண்டர் அறிவிப்பாணை கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதில் தமிழகம் அல்லாத பிற மாநில முட்டை உற்பத்தியாளர்கள் டெண்டரில் பங்கேற்க இயலாது எனவும், தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து அந்தந்த பகுதி முட்டை உற்பத்தியாளர்கள் தான் பங்கேற்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதனால் குறைந்த விலையில் முட்டை விநியோகம் செய்பவர்கள் டெண்டரில் பங்கேற்க இயலாமல் போகும் நிலை உருவாகும் என்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே அந்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் முட்டை கொள்முதல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை தொடர்ந்து முட்டை கொள்முதல் செய்ய முடியாததால் சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது என கூறி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கான முட்டை கொள்முதல் ஒப்பந்தப் புள்ளி தொடர்பான அரசாணையில் பாகுபாடுகள் உள்ளதாக எனக்கூறி, புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அதுவரை சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவதில் பாதிப்பு இல்லாத வகையில் இதுவரை யார் முட்டை வழங்கி வருகிறார்களோ அவர்களிடம் அதே விலையில் அதே எண்ணிக்கையில் முட்டை வாங்கலாம் எனவும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி