வங்கிகள் மீதான புகார்கள் கடந்த ஆண்டை விட அதிகரிப்பு.. முதலிடத்தில் எஸ்பிஐ : ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை : வங்கிகள் மீது முந்தைய ஆண்டை விட 24 சதவீதம் அதிகமான புகார்கள் குவிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஜூன் வரையிலான ஓராண்டு காலத்தில் வங்கி குறைதீர்ப்பு மையங்களில் 1.63 லட்சம் புகார்கள் குவிந்துள்ளதாகவும், அதில் 96 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மீது 47 ஆயிரம் புகார்கள் உள்ளதால் வங்கிகள் மீதான புகார்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

எச்.டி.எப்.சி., வங்கி 12 ஆயிரம் புகார்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்காவை சேர்ந்த சிட்டி பேங்க் மீது 1,450 புகார்கள் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விதிகளின்படி வங்கிகள் வெளிப்படையாக நடந்து கொள்வதில்லை என 22.1 சதவீத புகார்களும், ஏ.டி.எம்., மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக 15.1 சதவீத புகார்களும், கிரெடிட் கார்டு தொடர்பாக 7.7 சதவீதமும், வலைதளம் வாயிலான வங்கிச் சேவை குறித்து 5.2 சதவீத புகார்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியம், முன்கூட்டியே தெரிவிக்காமல் சேவைக் கட்டணம் வசூலிப்பது, கடன், டெபாசிட், நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ள முகவர்கள், வாராக் கடன் மீட்பு நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை அளிப்பது போன்றவை தொடர்பாக தலா 5 சதவீத புகார்கள் வந்துள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்தியஸ்தம் மூலம் தீர்வு காணப்பட்ட புகார் 42.4 சதவீதத்தில் இருந்து 65.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், வங்கி குறைதீர்ப்பாயங்கள் வாடிக்கையாளர்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு புகாரை பரிசீலிக்க ஆகும் சராசரி செலவு 3,626 ரூபாயில் இருந்து 3,504 ரூபாயாக குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: