கரூர்: கரூர் மக்களவை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் செய்ததை தொடர்ந்து நேற்று கரூரில் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். கரூர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கரூர் தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கடந்த 20ம் தேதி நேரில் பார்வையிட்டு, `மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் மனு அனுப்பினார். இந்தநிலையில், தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் நேற்று கரூர் வந்தார். அவர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.