ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. 2 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. முதல் கட்டமாக 13 தொகுதிகளில் ஏப்ரல் 29ம் தேதியும், 2ம் கட்டமாக மீதமுள்ள 12 தொகுதிகளில் மே 6ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது. ராஜஸ்தானின் பார்மர் மக்களவை தொகுதியில் வறட்சிதான் பெரும் பிரச்னையாக உள்ளது. பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ளது. இங்கு, முஸ்லிம்கள் அதிகம் வாழும் எல்லையோர கிராமங்களில் தற்போது வறட்சி நிலவுகிறது. பாண்டஸர் கிராமத்தைச் சேர்ந்த ஹபீப் அலி (70) கூறுகையில், ‘‘நான் வளர்க்கும் கால்நடைகளுக்கு இந்த வறட்சி காலத்தில் தீவனம் எதுவும் இல்லை. அவற்றுக்கு வைக்கோல் உள்ளிட்ட தீவனம் வாங்குவதற்காக என் மனைவியின் நகைகளை அடமானம் வைத்துள்ளேன். எல்லையோரத்தில் உள்ள பல கிராமங்களில் வாழும் விவசாயிகளின் நிலை இதுதான்,’’ என்கிறார்.