மோசடிகளால் திமுகவின் வெற்றியை தட்டிப்பறிக்க அதிமுக போடுவது தப்பு கணக்கு: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மோசடிகள் மூலம் திமுகவின் வெற்றியை தட்டிப்பறிக்க அதிமுக முயற்சிப்பது தப்புக் கணக்கு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்காலத்திற்கு ஏந்திச்செல்லும்  போர்க்களமாக மாறிவிட்ட தேர்தல் களத்தில், பாசிச சக்திகளை அடியோடு  வீழ்த்திடவும், அடிமைக் கூட்டத்தை அறவே அகற்றிடவும் தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் கிஞ்சிற்றும் அயராமல் அரும்பாடு பட்டதற்கு உரிய பலனை எதிர்பார்த்து மே 23ம் தேதிக்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம்.  இந்தத் தேர்தல் களத்தில் நமது அணியின் பணி இனிமையாக அமைந்திருந்தது.  

வாக்குப்பதிவு நடைபெற்ற புதுவை உள்ளிட்ட 39 நாடாளுமன்றத்  தொகுதிகளிலும், தமிழக சட்டப்பேரவைக்கான 18 தொகுதி இடைத்தேர்தலிலும், புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் கடுமையாகக்  களப்பணியாற்றிய திமுகவின் அனைத்து நிலையில் உள்ளவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் திரும்பத் திரும்பத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளின் தலைமை நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரையிலான அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியினை உரித்தாக்குகிறேன்.

மேலும் மதசார்பற்ற முற்போக்கு முழு வெற்றிக் கூட்டணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி எம்.ஜி.ஆர். கழகம், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, இந்திய சமூகநீதி இயக்கம், கிறிஸ்தவ  நல்லெண்ண இயக்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ் மாநில தேசிய லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை, சமத்துவ மக்கள் கழகம், இந்திய தேசிய லீக், மக்கள் விடுதலை கட்சி, உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்பினருக்கும் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கிறேன். விமர்சனக் கணைகளைத் தாங்கிக்கொண்டு பரிபூரண ஆதரவுப் பரப்புரை செய்த தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்திற்கு எப்போதும் போல எமது இதயமார்ந்த நன்றி.

தான் திருடி பிறரை நம்பாள் என்பது போல, தங்கள் செயலை மறைக்க தி.மு.க மீது பழியைப் போட்டு வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை நிறுத்தினர். மக்களிடம் உண்மை அம்பலப்பட்ட நிலையில், மதரீதியாக, சாதிரீதியாக வன்முறைகளைத் தூண்டும் மோசமான நடவடிக்கைகளில் இறங்கினர். கனன்று கொண்டிருக்கும் வன்முறை நெருப்பை சுயலாப நோக்கில் விசிறிவிடும் வேலையை  வாக்குப்பதிவுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். வன்முறையைத் தூண்டிவிட்டு, நம் கவனத்தைத் திசை திருப்பி, வாக்காளர்கள் மனதில் அச்சத்தை விதைத்து, மிச்சமிருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலில் தங்களின் இயல்பான மோசடிகளால் திமுகவின் வெற்றியைத் தட்டிப் பறித்து, தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என மாநிலத்தில் ஆளுகின்ற அடிமை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து, கணக்குப் போடுகிறார்கள்.

அது தப்புக் கணக்கு, பிற்போக்குத்தனமான பிழைக் கணக்கு என்பதை மக்கள் சந்தேகத்திற்கு இடமே இன்றி நிரூபிக்கத் தயாராகி விட்ட நிலையில், மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க.வுக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் இருக்கிறது. கடல் போன்ற மக்களவைத் தேர்தல் களத்தையும், ஆறு போன்ற 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தையும் எதிர்கொண்டு கடந்தது போலவே, வாய்க்கால் போன்ற இந்த 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நாம் செயலாற்றிட வேண்டும். கடலிலும் ஆற்றிலும் மோசடி செய்ய முனைந்தவர்கள், வாய்க்காலின் இயல்பான போக்கை வழிமறித்து திசை மாற்றிட எளிதாக முயற்சிப்பார்கள்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் மாநில அமைச்சர்களும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் தங்களிடம் உள்ள ஆட்சியின் கடைசி நேர அதிகார பலத்தை அடாவடியாகச் செலுத்தி, தி.மு.க. பெறவிருக்கும் வெற்றியைக் களவாடுவதில் முனைப்பு காட்டுவார்கள். அதனை முறியடித்திடும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். உங்களில் ஒருவனான நான் மே 1ம் தேதி முதல் 4 தொகுதி இடைத்தேர்தல் களத்தில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறேன். திமுக நிர்வாகிகளும் தோழமைக் கட்சியினிரும் தோளோடு தோள் நின்று 4 தொகுதிகள் முழுவதும் ஒவ்வொரு வீடாகச் சென்று, ஒரு வாக்காளரையும் தவிர்க்காமல் அனைவரையும் நேரில் சந்தித்து வாக்குகளைச் சேகரித்திட வேண்டும்.

ஆட்சி மாற்றத்திற்கு நம்மைவிட அதிக ஆர்வமாக உள்ள வாக்காளர்களின் மனதில், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்கிற உண்மையையும், நம்பிக்கையையும் நன்கு விதைத்திடும் வகையில் இடைத்தேர்தல் களப் பணிகள் அமையட்டும். அது முழுமையான வெற்றியாக மலரட்டும். ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் அயராது உழைத்தோருக்கும், மே19ல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நான்கு தொகுதிகளில் கடுமையாக உழைப்போருக்கும் மனமார்ந்த நன்றி. இவ்வாறு கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் அமைச்சர்களும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் தங்களிடம் உள்ள ஆட்சியின் கடைசி நேர அதிகார பலத்தை அடாவடியாகச் செலுத்தி, தி.மு.க. பெறவிருக்கும் வெற்றியைக் களவாடுவதில் முனைப்பு காட்டுவார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: