சுங்கச்சாவடியை சூறையாடிய விவகாரம் 5 பேர் சிறையில் அடைப்பு

புழல்: செங்குன்றம் அடுத்த நல்லூரில் உள்ள சுங்கச்சாவடியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், புழலில் இருந்து நேற்று முன்தினம் காலை கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் நல்லூர் சுங்கச்சாவடிக்கு வந்தது.

அப்போது அதிக கட்டணம் வசூலித்ததால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வேனில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, வேன் டிரைவர் பன்னீர் (34), உரிமையாளர் ஜேம்ஸ் (40) ஆகிய இருவரையும், சுங்கச்சாவடி ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர்.

ஒருசிலர் சுங்கச்சாவடியின் கண்ணாடி அறைகளை உடைத்தனர். இருதரப்பு புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர்களை தாக்கியதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சமீர் கோஸ் (25), ராஜேஷ் சாவ் (21) ஆகிய இருவரையும், சுங்கச்சாவடியை சூறையாடியதாக சோழவரம் அடுத்த ஆத்தூரை சேர்ந்த பாபு (25), காரனோடை சண்முகா நகரை சேர்ந்த சலீம் (32), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா (36) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: