இணையதள குற்றங்களை தடுப்பது குறித்து சமூக வலைதள நிறுவனங்களுடன் ஆலோசனை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இணையதள குற்றங்களை  தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஆலோசனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதால் சைபர் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை துவங்க  ஆதாரை கட்டாயமாக இணைக்ககோரி ஆண்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய  அமர்வு முன்னிலையில் விசாரணையில் உள்ளது. வழக்கில் யு டியூப், பேஸ்புக், வாட்ஸ்ஆப், டிவிட்டர் நிறுவனங்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்த நீதிபதிகள், இந்தியாவில் ஏன் இதுவரை குறைதீர்ப்பாளர்களை நியமிக்கவில்லை என்றும் நிறுவனங்களுக்கான அலுவலகங்கள் ஏன் இந்தியாவில் அமைக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், இணையதள குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை அமைப்புகள் கேட்கும் விவரங்களை அந்த நிறுவனங்கள் தர மறுப்பது ஏன் என்பது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் அரவிந்த் தத்தார் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடும்போது, வாட்ஸ் அப் எந்த ஒரு தகவல்களையும், ஆவணங்களையும் சேமித்து வைப்பதில்லை.

ரகசியத்தன்மை பாதுகாக்கப்படுவதாலேயே உலக அளவில் வாட்ஸ் அப் பிரபலமாகியுள்ளது. விசாரணை அமைப்புகளுக்கு வாட்ஸ் அப் முழு ஒத்துழைப்பு தரும் என்று உறுதியளித்தார். கூகுள் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதிடும்போது, விசாரணை அமைப்புகளுக்கு, நூறு சதவீதம் ஒத்துழைப்பு தருகிறோம். அரசு சார்ந்த அமைப்புகள் கேட்கும் தகவலை வழங்கி வருகிறோம். தனியார் அமைப்புகள் கேட்கும் தகவல்களை தருவதில்லை என்றார்.

டிவிட்டர் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, புலனாய்வு அமைப்புக்கு  தகவல்களை தர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த வேண்டும். அந்த ஆலோசனையை வருகிற மே 20ம் தேதியில் இருந்து 27ம் தேதிக்குள் நடத்த வேண்டும்.

ஆலோசனை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் சமூக வலைதளங்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: