சென்னை - ஆந்திரா இடையே 30ம் தேதி பானி புயல் கரை கடக்கும்: கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது.

29ம் தேதி புயலாக மாறும். 30ம் தேதி சென்னை-ஆந்திரா இடையே பானி புயல் கரையைக் கடக்கும். இதையடுத்து தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் ஒரு காற்று சுழற்சி மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கிறது.

அதைத் தொடர்ந்து தற்போது இலங்கைக்கு கிழக்குப் பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகி மெல்ல மெல்ல வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. தற்போது அது சென்னைக்கு 1500 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம் புதுச்சேரி கடலோரப் பகுதியில் கடலில் சீற்றம் அதிகரிக்கத் தொடங்கிய சில இடங்களில் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தற்போது வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி நிலை கொண்டுள்ளது. 26ம் தேதி காலை அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

மேலும் 27, 28ம் தேதிகளில் புயலாக வலுப்பெறும். இந்த புயல் வட தமிழக கடலோரப் பகுதிக்கு நகர்ந்து வரும். பின்னர் அந்த புயல் தீவிரப் புயலாக மாறும்.  அதனால், இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அதேபோல 27, 28ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். 28, 29ம்  தேதிகளில் புயல் காரணமாக கனமழை பெய்யும். 30ம் தேதி அந்த புயல் சென்னை-ஆந்திரா இடையே கரையைக் கடக்கும்.

பானி பெயர் ஏன்?

வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புயல்கள் அனைத்துக்கும் 12 நாடுகள் பெயர் வைத்துள்ளன. அதன்படி தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ‘FANI’ (பானி) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை வங்கதேசம் பரிந்துரைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: