முக்கொம்பு கதவணை கட்டுமான பணி துவங்கியது: ஆகஸ்ட்டில் வரும் வெள்ளம் வீணாகாமல் தடுக்க 3 மாதங்களில் காப்பணை கட்டப்படும்

திருச்சி: கர்நாடக மாநிலத்தில்  உருவாகும் காவிரி தமிழகத்தில் மேட்டூருக்கு  வந்து திருச்சி முக்கொம்பு வரை ஒரே காவிரியாக வருகிறது. முக்கொம்பில் தான்  காவிரி, கொள்ளிடம்என இரு நதிகளாக பிரிகிறது. கட்டுக்கடங்காத வெள்ளம் வரும் காலங்களில் சேதத்தை தவிர்க்கும் வகையில் உபரி நீரை வெளியேற்ற கொள்ளிடம் உருவாக்கப்பட்டது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் 182 ஆண்டு கால பழமை வாய்ந்த கொள்ளிடம் தடுப்பணை ஆகஸ்ட் 22ம் தேதி இரவு  உடைந்தது. கொள்ளிடம் கதவணையின் 9 மதகுகள்(6 முதல் 14 வரை) வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அணை உடைந்ததை தொடர்ந்து இன்று வரை கொள்ளிடம் வழியாக தண்ணீர் வீணாகிக்கொண்டே இருக்கிறது.

அணை உடைந்த இடத்தில் புதிய கதவணை ரூ.387.60 கோடியில் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த பணியை கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். எல் அண்டு டி நிறுவனம் இந்த பணியை செய்கிறது. முதல்கட்டமாக மண் பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது அணைக்கான பணிகள் துவங்கி உள்ளது. 2 ஆண்டுகளுக்குள் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே உடைந்த அணையில் இருந்து சிறிது கிழக்கே இந்த அணை கட்டப்படுகிறது. முதல்கட்டமாக கொள்ளிடத்தில் வீணாகும் நீரை தடுத்து நிறுத்த காப்பணை கட்டப்படுகிறது. இந்த காப்பணை  சுமார் 3 மீட்டர் உயரத்துக்கு அமையும். இது அமைக்கப்பட்டால் வரும் ஆகஸ்ட் மாதம் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டால் அது கொள்ளிடம் வழியாக வீணாகாமல் தடுக்கப்படும்.  கொள்ளிடம் அணை உடைந்ததால் ஏற்கனவே 125 டிஎம்சி தண்ணீர் வீணானது. இன்றும் இதன் வழியாக நீர் கசிந்து வெளியேறுகிறது. எனவே காப்பணையை இன்னும் 3 மாதத்தில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

அணை கட்டுமான பணிக்காக சீனாவில் இருந்து இரும்பு தகடுகள் இறக்குமதி  செய்யப்படுகிறது. இவை தலா 1 மீ அகலம், 12 மீ நீளம் கொண்டவையாக இருக்கும். இதன் எடை 1டன் இருக்கும்.  இந்த இரும்பு தகடுகள்  புதிதாக அணை அமையும் இடத்தில் 12 மீ ஆழத்திற்குள் புதைக்கப்பட்டு தரை மட்டத்தில் இருந்து மேலும் 3 மீட்டர் உயரத்திற்கு நிறுவப்படும். மணற்பாங்கான இடத்தில் அணை அமைவதால் அடித்தளத்தை பலப்படுத்த இரும்பு தகடுகள் பதிக்கப்படுகிறது.அணைக்கான தூண்கள் அமைப்பதற்கான பணிகளை ராட்சத இயந்திரங்கள் தொடங்கி விட்டன.  இதற்காக மேலும் பிரத்யேக இயந்திரங்கள் வரவழைக்கப்படுகிறது. புதிதாக அணை அமையும் பகுதியில் 15 மீட்டர் ஆழத்தில் மணலும், அடுத்த 7 மீட்டரில் மிதமான பாறையும், அடுத்த நிலையில் மிக கடினப்பாறையும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதால் அதற்கு ஏற்ப 22 மீட்டர் ஆழத்துக்கு கீழ் கடினப்பாறையில் இருந்து கட்டுமான பணி தொடங்கும் வகையில் அடித்தளம் அமைக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: