மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள் மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அவற்றை தூர்வாரவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும், குளங்கள் மற்றும் கண்மாய்கள் தூர்வாரப்படாததால் நீரின் அளவு குறைந்துவிடுகிறது. தூர்வாரப்படாததால் சேரும் குப்பைகளால் ஒரு கண்மாயில் இருந்து இன்னொரு கண்மாய்க்கு செல்லும் வழியும் அடைபடுகிறது. இந்த நிலையில், 2020ம் ஆண்டில் தமிழகத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்களை தூர் வாரி பராமரிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். முன்னதாக இவ்வழக்கு பலமுறை விசாரணைக்கு வந்தபோது நீர்நிலைகள் அருகிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், தூர்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கானது என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பேது, தமிழகத்தில் உள்ள கண்மாய்கள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, தமிழகத்தில் கண்மாய்கள், குளங்களை முழுமையாக தூர் வார வேண்டும். அதற்கு தேவையான இயந்திரங்களை மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி