பதேர்வா: ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து மீது விழுந்தது. இதில், 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள தாத்ரி என்னுமிடத்தில் இருந்து கந்தோவை நோக்கி மினி பேருந்து ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பியாகுல் பகுதியை கடக்கும்போது திடீரென அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மண் சரிந்து பாறைகள் உருண்டு பேருந்து மீது விழுந்தன. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மீதமுள்ள 9 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் 3 பேர் பெண்கள்.