தெலங்கானாவில் இன்டர்மீடியட் தேர்வு முடிவில் குளறுபடி 20 மாணவர்கள் தற்கொலை: தொடர் போராட்டத்தால் பரபரப்பு

திருமலை: தெலங்கானாவில் இன்டர்மீடியட் தேர்வில் குளறுபடியையடுத்து 20 பேர் தற்கொலை செய்துகொண்டதால் முதல்வர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு 4 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் இன்டர்மீடியட் தேர்வில், 9.74 லட்சம் மாணவர்களில்,  3.28 லட்சம் மாணவ, மாணவிகள் தோல்வியடைந்தனர். இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் சங்கத்தினர் கூறியதாவது: 9 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கு குறுகிய காலஅவகாசம் அளித்ததால் ஆசிரியர்கள் சரியான முறையில் திருத்தவில்லை. அவர்கள் அலட்சியமாக இருந்ததே தேர்ச்சி குறைவுக்கு காரணம். மேலும் திருத்தப்பட்ட விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்த தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அலட்சியமாக நடந்து கொண்டு பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளது.

அந்த தனியார் நிறுவனம் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவின் நெருங்கிய நண்பரான ராஜு என்பவருக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் எந்த முன் அனுபவம் இல்லாத அந்நிறுவனத்திற்கு விடைத்தாள் பதிவேற்றம் செய்யும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுவதிலும் நியாயம் உள்ளது.

அரசு நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனம் செய்த தவறால் இதுவரை  20 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அரசு மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனம் செய்த குளறுபடியால் மாணவர்கள் ஒவ்வொரு விடைத்தாள்களை மறுகூட்டல் செய்வதற்கு தலா ₹150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக ரத்து செய்து அனைவருக்கும் மறுகூட்டலுக்கு அனுமதிக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து பல்வேறு கட்சியினரும், முதல்வர் அலுவலக முற்றுகை உட்பட பல்வேறு போராட்டங்களில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறுகூட்டல் கட்டணம் ரத்து

முதல்வர் சந்திரசேகர ராவ், இன்டர்மீடியட் தேர்வாணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறுகூட்டலுக்காக விண்ணப்பிக்கும் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இது பொருந்தாது. தவறு செய்தவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: