சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மறைவை தொடர்ந்து மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் ஆளும் கட்சியான அதிமுக மட்டும் கடும் போராட்டத்திற்கு பின் நேற்று முன்தினம் வதம்பச்சேரியை சேர்ந்த கந்தசாமி என்பவரை வேட்பாளராக அறிவித்தது. இவர் மறைந்த எம்.எல்.ஏ. கனகராஜின் சித்தப்பா மகன். கட்சி தலைமையின் அறிவிப்பு, வேட்பாளர் பந்தயத்தில் இருந்த மாதப்பூர் பாலு மற்றும் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலின் போது கனகராஜை வேட்பாளராக அறிவித்தபோதும் அதிருப்தியில் ஒன்றிய செயலாளர் மாதப்பூர் பாலு ஒரு வாரம் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.