சீர்காழி: சீர்காழி பகுதியில் வயல்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்தது சம்பந்தமாக நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா பழையபாளையம் கிராமத்தில் விளைநிலங்களுக்கு இடையே கடந்த 2013ம் ஆண்டு தனியார் எண்ணெய் நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து எரிவாயு எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக தாண்டவன் குளத்திலிருந்து மேமாத்தூர் வரை முதற்கட்டமாக 500 கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள விளைநிலங்களை கையகப்படுத்தி குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தால் விளைநிலங்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன் குழாய் பதிக்கும் பணியை தடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி டிஎஸ்பி வந்தனா, தாசில்தார் சபிதா தேவி ஆகியோர் சந்தித்து, மக்களவை தேர்தல் முடிந்ததும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்ேபரில், அவர்கள் கலைந்து சென்றனர்.