தஞ்சை: நீதிமன்ற கட்டணங்கள் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் 26, 27ம் தேதிகளில் நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என்று வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்ட முடிவில் பொது செயலாளர் சிவசுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இதுவரை வக்காலத்து மெமோ அப்பியரன்ஸில் வழக்கறிஞர் அட்டெஸ்ட் செய்யும் நடைமுறை மட்டுமே இருந்து வந்தது. தற்போது, அட்டெஸ்ட் செய்யும் வழக்கறிஞர்களின் போட்டோ ஒட்ட வேண்டுமென கொண்டு வரப்பட்டுள்ள புதிய நடைமுறையை திரும்ப பெற வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற பணியிடங்கள் நிரப்பாமல் காலியாகவே உள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சப் ஜட்ஜ் நியமனம் செய்யாமல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. சமரச தீர்வு என்ற நடைமுறை எந்த நேரத்தில் வந்தாலும் அதை வழக்கறிஞர்கள் ஏற்று கொள்ளமாட்டோம். ஏனெனில் இது ஒரு கட்ட பஞ்சாயத்துபோல் உள்ளது. வாடகை சட்ட தீர்ப்பாயம், மோட்டார் வாகன நஷ்டஈடு கோரும் மனு ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தாலுகாவில் தீர்ப்பாயம் அமைத்து விசாரணையை விரைவுப்படுத்துவதற்கு பதில் சமரசம் என்ற நிலைக்கு கொண்டு செல்வதை கைவிட வேண்டும். நீதிமன்ற கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வழக்காடிகள் பாதிக்கப்படுகினறனர். எனவே, இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26, 27ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதில் 60,000 வக்கீல்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு சிவசுப்பிரமணியன் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி