சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்கள் அகற்றப்படும் என உறுதிமொழி டிக்டாக் செயலிக்கான தடை நீக்கம்: ஐகோர்ட் நீதிபதிகள் அறிவிப்பு

மதுரை: மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் டிக்டாக் செயலியை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இதனை பலரும் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கடந்த பிப்ரவரியில் டிக்டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, இளைஞர்களின் நலன் கருதி டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சகத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும் டிக்டாக் வீடியோக்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் கிளையின் தடையை நீக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஏப்.24க்குள் (நேற்று) முடிவெடுக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிக்டாக் நிறுவனம் தரப்பில், ‘‘ஐகோர்ட் கிளை தடைக்கு பின், ஆறு மில்லியன் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன. தவறான நோக்கம் மற்றும் ஆபாசமான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டால், அடுத்த 15 நிமிடங்களில் அகற்றப்படுகிறது.  இந்திய அரசின் கருத்துரிமை சட்ட விதிகளுக்கு உட்பட்டே டிக்டாக் இயங்குகிறது’’ என்று பதில் அளிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள், ‘‘இந்தியாவில் சிறுவர், சிறுமியரை பாதுகாக்க சரியான சட்டங்கள் இல்லை’’ என்றனர். மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘குழந்தைகளின் தனி உரிமை பாதுகாப்பு தொடர்பாக கடந்த 2017ல் அமைக்கப்பட்ட நீதிபதி தலைமையிலான குழுவின் சட்ட முன் வரைவு தயாராக உள்ளது. இந்த சட்ட முன்வரைவு வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒப்புதலுக்கு வைக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்பின், டிக்டாக் தரப்பில், ‘‘பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளைவிட டிக்டாக் செயலியில் அதிக பாதுகாப்பு வசதிகள் உள்ளன. தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்தால் தானாகவே நீக்கம் செய்யும் வசதி உள்ளது. இதுபற்றி புகார் தெரிவிக்க இந்தியாவுக்கு என தனி வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தடையை நீக்கவேண்டும்’’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு நீதிபதிகள், ‘‘டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஆனால் சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய மாட்டோம் என உறுதிமொழி அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

இதற்கு டிக்டாக் நிறுவனத்தின் சார்பில், ‘‘பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோரின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால், அவற்றை செயலியிலேயே அகற்றும் வகையில் உள்ளது.

அப்படியே தவறினாலும் மனிதர்களை கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் 13 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மைனர். இந்தியாவில் 18 வயதிற்கு கீழுள்ளவர்களே மைனர் பிரிவில் சேர்க்கப்படுவர். டிக்டாக் செயலி தொடர்பாக இந்தியாவில் இருந்து வரும் புகார்களை விசாரிக்க தனியாக நோடல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்’’ என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டிக்டாக்  செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி அனுமதித்தனர். அதே நேரம் நிறுவனத்தின் உறுதிமொழியை மீறினால், ஐகோர்ட்டே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் ெசய்யும். அதை டிக்டாக் நிறுவனம் சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரித்து,  விசாரணையை ஒத்திவைத்தனர். டிக்டாக் செயலி தொடர்பாக இந்தியாவில் இருந்து வரும் புகார்களை விசாரிக்க தனியாக நோடல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: