×

குற்ற வழக்கில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஓய்வுபெற்ற டிஜிபி அடங்கிய குழு அமைப்பு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக பரிந்துரை வழங்குவதற்கு முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஜாமீன் கோரி இருவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்க கூடிய வழக்குகள், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்க கூடிய வழக்குகள் மற்றும் ஆயுள் தண்டனை வழங்க கூடிய வழக்குகளின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக கணக்கெடுத்து அறிக்கையாக தாக்கல் செய்யும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி டிஜிபி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சென்னையில் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளின் எண்ணிக்கை 2017ல்  297 என இருந்தது. 2018ல் 476 ஆக அதிகரித்துள்ளது. ஆயுள் தண்டனை வழங்கும் வழக்குகளின் எண்ணிக்கை 203 ஆக இருந்தது, இந்த எண்ணிக்கை 2018ல் 230 ஆக அதிகரித்துள்ளது.

 கடந்த 2013 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில் 3 ஆண்டு தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளில் 3.35 லட்சம் வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது.  54,052 வழக்குகளில் விடுதலை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை வழக்குகளில் 868 வழக்குகள் தண்டனையிலும், 1558 வழக்குகள் விடுதலையிலும் முடிந்துள்ளன என்று கூறப்பட்டிருந்து. அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி அளித்த உகத்தரவு வருமாறு: 2013ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2018ல் குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளன என்பது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும். இந்தியாவின் நீதி பரிபாலனை என்பது குற்றவாளிகளை சீர்திருத்தி மறுவாழ்வு வழங்கும் வகையில் உள்ளது.
ஆனால் குற்றவாளிகளை எப்போதும் குற்றவாளியாகவே வைத்திருக்கும் வகையில் போலீசாரின் செயல்பாடுகள் உள்ளன. ஒரு வழக்கில் சிக்கியவர்கள், திருந்தி புதுவாழ்வு வாழ அனுமதிக்காத வகையில்,  தொடர்ச்சியாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

எனவே, புலன் விசாரணையின் தரத்தை  மேம்படுத்த முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ், ஓய்வு பெற்ற எஸ்பி சித்தண்ணன், மூத்த வக்கீல்  என்.ஆர்.இளங்கோ, பேன்யான் அமைப்பின் இயக்குனர் கிஷோர் குமார், அண்ணா நகர் துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் அடங்கிய குழுவை இந்த நீதிமன்றம் அமைத்து உத்தரவிடுகிறது. இந்த குழு 8 வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும். மேலும், டிஜிபியின் அறிக்கை முழுமையாக இல்லை என்பதால் மாவட்டங்களின் முழு விவரங்களை திரட்டி, வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : investigation ,The High Court , Criminal case, group of retired DGPs, High Court,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...