நடிகர் விஜய் படப்பிடிப்பில் ராட்சத விளக்கு விழுந்து எலக்ட்ரீஷியன் படுகாயம்

சென்னை: சென்னை அருகே நடிகர் விஜய்யின் புதிய பட ஷூட்டிங்கின்போது, ராட்சத விளக்கு சரிந்து விழுந்து எலக்ட்ரீஷியன் படுகாயம் அடைந்தார். பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை இவிபி பிலிம் சிட்டியில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக கால்பந்து மைதானம் போன்று பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டெக்னீஷியன்கள் இரவு பகலாக, லைட்  அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சாலிகிராமம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் செல்வராஜ் (55) செட்டிங் செய்யப்பட்ட லைட்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயரமான கிரேன் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த பெரிய போகஸ் லைட் கழன்று, கிரேனின் கீழே நின்று வேலை செய்து கொண்டிருந்த செல்வராஜ் மீது விழுந்தது.

இதில் படுகாயமடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் செல்வராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நடிகர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: