முதல்வர் தேர்வு ரத்து பச்சையப்பன் கல்லூரியில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை: லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பச்சையப்பன் கல்லூரி முதல்வர்  தேர்வை ரத்து செய்த உயர் நீதிமன்றம் முதல்வர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் சென்னையில் 6 கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியின் முதல்வர் காளிராஜ் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு என்.சேட்டு என்பவர் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து கல்லூரி பேராசிரியர்கள் நந்தினி, ஆர்.நடராஜன், டி.சேகர் உட்பட 7 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு  நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:முதல்வர் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படை தன்மை பின்பற்றப்படவில்லை என்றும், தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை விதிகள் பின்பற்றப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது.

மனுதாரர்கள் தேர்வு நடைமுறைகளில் பங்கேற்காததால் அவர்களுக்கு வழக்கு தொடர அதிகாரம் இல்லை என்றும் தேர்வு நடைமுறைகள் முறையான விதிகளை பின்பற்றி நடைபெற்றதாகவும் பச்சையப்பன் அறக்கட்டளை தேர்வு குழு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. பல்கலைகழக மானிய குழு விதிகளை பின்பற்றாமல் தேர்வு குழு அமைக்கப்பட்டதாகவும், பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும் பச்சையப்பன் கல்லூரியின் தற்காலிக நிர்வாகியும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் நியமனத்தில் ஒருதலைப் பட்சமான முடிவையோ, ஒரு சாராருக்கு சாதகமான முடிவையோ எடுப்பதை இந்த நீதிமன்றம் கண்களை மூடி பார்த்துக்கொண்டிருக்காது. கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் ஆகியோருக்கு சம்பளம் மக்கள் வரிப்பணத்திலிருந்துதான் வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. முதல்வர் தேர்வு குறித்து பச்சையப்பன் அறக்கட்டளை அனுப்பிய கருத்துருவை கல்லூரிக் கல்வி இயக்குநரும், சென்னை பல்கலைக்கழகமும் சரியாக கவனிக்கத் தவறி விட்டது. எனவே, விதிமுறைகளுக்கு முரணாக பச்சையப்பன் கல்லூரி முதல்வராக சேட்டு தேர்வு செய்யப்பட்டதை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது.

கல்லூரி முதல்வர் பதவிக்கு விதிகளை பின்பற்றி மீண்டும் தேர்வு நடைமுறைகளை   இடைக்கால நிர்வாகி மேற்கொள்ள வேண்டும். தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டும். கல்லூரி முதல்வர் தேர்வு நடைமுறையில் முறைகேடுகள் குறித்து மனுதாரர்கள் அளித்த புகார்களை லஞ்ச ஒழிப்பு துறைக்கு இடைக்கால நிர்வாகி அனுப்பி வைக்க வேண்டும். புகார்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி தகுந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் நடவடிக்கைகள் சமுதாயத்தில் புற்றுநோய் போல பரவுகிறது. நேர்மையில்லாமல் நியமிக்கப்பட்ட ஒருவர், நேர்மையாக செயல்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது.உன்னத நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இந்த கல்லூரிக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்கள் பாவம் இழைத்து வருகின்றனர்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: