மக்களவை தொகுதியில் போட்டியிட சீட் தராததால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் எம்.பி.உதித் ராஜ்

டெல்லி : வடமேற்கு டெல்லி மக்களவை எம்.பி.யான உதித் ராஜ் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உதித் ராஜ் இன்று கட்சியில் இணைந்தார். மக்களவை தொகுதியில் போட்டியிட சீட் தராததால் பாஜக எம்.பி உதித் ராஜ் காங்கிரஸில் இணைந்தார். வடமேற்கு டெல்லி தொகுதி எம்பியாக இருப்பவர் உதித்ராஜ். தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். மேலும், கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். 6ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 12ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிலையில், கிழக்கு டெல்லியில் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், புதுடெல்லியில் மீனாட்சி லேகி ஆகியோரை வேட்பாளர்களாக பாஜக அறிவித்தது.

ஆனால், உதித் ராஜின் கோரிக்கை மற்றும் போராட்டம் காரணமாக, வடமேற்கு தொகுதியின் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், டெல்லி எம்பிக்களிலேயே தாம் சிறப்பாக செயல்பட்ட போதும், தனக்கான வாய்ப்பு குறித்து பாஜக உறுதிபடுத்தவில்லை என்று உதித் ராஜ் கூறிவந்தார். சீட் பெறுவது தொடர்பாக பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க முயன்ற போதும் முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். வடமேற்கு தொகுதியின் வேட்பாளர் என்ற அறிவிப்புக்காகக் காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த உதித் ராஜ், வாய்ப்பளிக்கப்படவில்லை எனில் பாஜகவிலிருந்து விலகப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், வடமேற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் கட்சியில் இருந்து விலகிய உதித்ராஜ் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: