பொன்பரப்பியில் நடந்த கலவரத்தை கண்டித்து விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: பொன்பரப்பியில் தேர்தல் நாளன்று ஒரு பிரிவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 18ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குபதிவின் போது அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் ஒரு பிரிவினரை குறி வைத்து தாக்கல் நடத்தப்பட்டது. அதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விசிக-வின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இது தவிர, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்தினால் மட்டுமே தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுகிறது என்பது உண்மையாகும் என்றார். அதேபோல், ஆட்சிகளும், காட்சிகளும் மாறும் என்பதால், அதிகாரிகள் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்று, திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: