இலங்கை தாக்குதல் குறித்த உளவுத்துறையின் தகவல் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை: அதிபர் சிறிசேன பகீர்

கொழும்பு: இலங்கையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் தகவல்களை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. நேற்றுமுன்தினம் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தபோது குண்டு வெடித்தது. மேலும், கொழும்பு பஸ் நிலையத்திலும், சர்வதேச விமான நிலையம் அருகிலும் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அடுத்தடுத்த சம்பவங்களால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு இலங்கையில் அவசர நிலை அமலுக்கு வந்தது.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை தகவல் பரிமாறியதாகவும் ஆனால், அதை பொருட்படுத்ததாதே இந்த கொடூர தாக்குதலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உளவுத்தகவல்களை புறக்கணித்ததற்காக மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

இந்நிலையில், தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் தகவல்களை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று  இலங்கை அதிபர் சிறிசேன அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், தகவல் கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பேன் எனவும், இலங்கை பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பிரிவு முற்றிலும் சீரமைக்கப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது சிறிசேனா தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: